தனிமையின் பத்து வருடங்கள்

நண்பர்களுக்கு வணக்கம். இதை வாசிக்கும் நீங்கள் அடையப்போவது என்னவென எனக்குத் தெரியவில்லை . இந்த நாவலுக்கு (அ) கட்டுரைத் தொடருக்கு (அ) டைரிக்குரிப்பிற்கு எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளுங்கள் மேற்கண்ட தலைப்பில் நான் கடந்த பத்து ஆண்டுகளாக என் வாழ்வில் நடந்தவற்றைத் தொகுத்து எழுதப் போகிறேன். அது ஒரு கட்டுரையாக இருக்கலாம் அல்லது நினைவுக் குறிப்பாக இருக்கலாம். அல்லது ஒரு புனைவாகக் கூட இருக்கலாம். எனது கதையை ஏன் நீங்கள் கேட்கவேண்டும்? வாழ்க்கையில் எவ்வளவோ செய்வதற்கு இருக்கும்போது இதையேன் படிக்கவேண்டுமென நீங்கள் கேட்கலாம் . இதற்கு என்னால் உறுதியாக எந்த பதிலும் அளிக்க முடியாவிட்டாலும் எனக்குள் இருக்கும் உங்களை நீங்கள் சிறிதளவு கண்டு கொள்ளலாம் என்றுமட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது. இவற்றையெல்லாம் எழுத என்ன வயசாகிவிட்டதா? 27 வயது. ஓடுகிற வயது. வென்றெடுக்க வேண்டிய வயது. இந்த வயதில் ஏன் இப்படியொரு சுய சரிதை என நீங்கள் கேட்கலாம். வயது சிறிதென்றாலும் ஒரு பெரும் வாழ்க்கை அனுபவம் இருக்கிறது. அவற்றை எழுத வேண்டுமென தோன்றுகிறது. எது என் நினைவில் நிற்கிறது? அதன் மூலம் என்னை நான் புரிந்து கொள்ள முயல்கிறேன் . பத்தாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நான் என்ன செய்து கொண்டிருப்பேன். அன்று வாழ்வு குறித்த என்ன கனவுகள் கொண்டிருந்தேன் என இன்று நினைத்துப் பார்க்கும் போது திகைப்பாக இருக்கிறது. பணம் சம்பாதிக்கவேண்டும். காதலிக்க வேண்டும். புகழ் அந்தஸ்து உலகம் சுற்ற வேண்டும் என்னென்ன கனவுகள். அன்று தனிமையில் இந்த கனவுகள் எல்லாம் கண்ட என் வீட்டின் அறையில் இன்று அதே கனவுகளை மீட்டிக் கொள்கிறேன். வெளியே இருட்டின் இருள் நிறைந்திருக்கிறது. வீட்டின் தகரக் கூரையில் பெய்யும் மென் மழை ஏதோ எனக்கு உணர்த்த முயல்கிறது. அன்று என் கனவுகளின் கொண்டாட்டமாக இருந்த மழை இன்று என் நிராசைகளின் காயங்களை மென்மையாக வருடுகிறது. எனது தனிமையின் தோழி இந்த மழைதான். பஞ்சிலிருந்து முழுமையாக பிழிந்து விடும் நீரைப்போல எனது மனதில் தேங்கியிருக்கும் இறந்தகாலத்தை இந்த எழுத்தில் பிழிந்து விட்டு விடலாமென பார்க்கிறேன் . பார்ப்போம் எந்த அளவுக்கு அது சாத்தியமாகிறது என ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்வு (சிறுகதை)

அஞ்சலை நாவல் ஒரு பதிவு

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்